கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்திட்டமொன்றை வகுத்து, கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை கல்வித் துறையில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வ ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (13) காலை கல்வி அமைச்சு வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
ஒவ்வொரு அமைச்சருக்கும் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் உதவ ஒரு ஆலோசகர் அல்லது குழுவை நியமிக்க ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின்படி இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களாக சங்கைக்குரிய மொரகந்தேகொட ஆரியவன்ச தேரர் – சிரேஷ்ட விரிவுரையாளர், ருஹுணு பல்கலைக்கழகம்
பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா – ஓய்வுபெற்ற பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ஷியாமணி ஹெட்டியாரச்சி – பேராசிரியர், மாற்றுத்திறனாளிகள் கல்விப் பிரிவு, மருத்துவ பீடம், களனி பல்கலைக்கழகம்
திரு. ஆனந்த கலப்பத்தி – ஆணையாளர், லான்செட் (Lancect) ஆணைக்குழு
கலாநிதி சங்கரபிள்ளை அறிவழகன் – புள்ளிவிபரவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வைத்தியர் சயூரி ருவன்மலி பெரேரா – மனநல மருத்துவ சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை மருத்துவ பீடம் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர்.
திரு. தம்மிக்க அழகப்பெரும – தலைவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
திரு. ரமிந்து பெரேரா – விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
திரு. ரத்நாயக்க கருணாசிறி – ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்
வைத்தியர். வை. எச். சஷிதர டி சில்வா – மருத்துவர்களுக்கான விளையாட்டு மருத்துவ உடற்தகுதி தேசிய பயிற்சித் திட்டத்தின் வளவாளர்
திரு. டி. ஜோன் குயின்டஸ் – ஓய்வுபெற்ற கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்
திரு. டி. எம். பிரேமவர்தன – ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்
கலாநிதி ஜானக ஜயலத் – சிரேஷ்ட விரிவுரையாளர், தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கலாநிதி வசந்த ஹேரத் – ஆசிய பசிபிக் முன்பராய அபிவிருத்திக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி.
ஆகியோர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.