தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது இஸ்ரேல் நேற்று (25) இரு முறை நடத்திய வான் தாக்குதல்களில், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்ட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதல் தாக்குதலுக்குப் பின், காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர் மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் மொஹம்மட் சலாமா எனும் அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஹுஸாம் அல் மஸ்ரி எனும் ரொய்ட்டர்ஸ் புகைப்பட ஊடகவியலாளர் AP உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்காக பணியாற்றிய மரியம் அபு தகா NBC வலையமைப்பிற்காக பணியாற்றிய மொஆஸ் அபூ தாஹா ஆகிய நால்வர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் காயத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில் ஐந்தாவது ஊடகவியலாளரான அஹமட் அபூ அஸீஸ் என்பவர் உயிரிழந்திருப்பதாக பின்னர் உறுதி செய்யப்பட்டது.
தாக்குதலில் உயிரிழந்த மொஹம்மட் சலாமா சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, தனது திருமண நாளுக்காக ஆவலுடன் இருந்தார். அவரின் வருங்கால மனைவி ஹாலா அஸ்ஃபூர் ஒரே தொழில், ஒரே போராட்டம், ஒரே கனவுகளுடன் இணைந்த பத்திரிகையாளர்.
போரால் சிதைந்த காசாவின் தெருக்களில் மொஹம்மட் சலாமாவின்
கேமரா, ஹாலாவின் பேனா இணைந்து பசி கொண்ட குழந்தைகளின் துயரங்களையும், மனவலிமை கொண்ட பெண்களின் போராட்டங்களையும் உலகிற்கு கொண்டு சென்றது.
“நாம் சேர்ந்து இருக்கும் வரை, மரணம் எங்களை வெல்ல முடியாது,” என்று முகம்மது ஒருமுறை ஹாலாவிடம் கூறியிருந்தார்.
ஆனால் நேற்று, குண்டுவீச்சில் நாசர் மருத்துவமனை சிதைந்தபோது, அந்த வார்த்தைகளும் சிதைந்தன.
ஹாலாவின் கண்முன்னே முகம்மது சலாமா உயிரிழந்தார். காதலனை, துணையை, போராளி நண்பனை இழந்த துயரத்தில் ஹாலா உயிருடன் இருந்தாலும், உள்ளுக்குள் சிதைந்து போயிருக்கிறார்.
அவள் ஒருபோதும் நினைக்கவில்லை போரின் சிதைவுகளை உலகுக்குக் காட்ட ஓடிய தனது காதலன், அந்த சிதைவுகளின் சாட்சியமாகவே வீழ்வார் என்று.