தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168 முஸ்லிம்களும் புதைக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று இன்று (25.08.2025) அனுமதி் வழங்கியது.
முறைப்பாட்டாளர் றவூப் ஏ மஜீத் சார்பில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம். மனாறுதீன், முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ஜே.றாஸி முஹம்மத் இன்று மன்றில் தோன்றி இருந்தனர்.
1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்தி காணாமாலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செய்த வழக்கு கடந்த மாதம் (21.07.2025) திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
கடந்த தவணையில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றிற்கு சமூகமளித்திருந்தனர். கௌரவ சட்டமா அதிபர் சார்பாக எவரும் அன்றைய தினம் கெளரவ மன்றில் தோன்றியிருக்கவில்லை.
கெளரவ மன்றிற்கு சமர்ப்பணத்தை மேற்கொண்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி ” குருக்கள்மடம் மனிதப் படுகுழியானது முறையாக தோண்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தமது அலுவலகம் தொடர்ந்தும் பேணி வருவதாகவும் குறித்த சந்தேகத்துக்கிடமான மனிதப் புதை குழி அமையப்பெற்றுள்ளதாக நியாயமாக நம்பப்படும் பிரதேசத்தைத் தோண்டுவதற்கான கட்டளையினை மன்று ஆக்குமிடத்து தாங்கள் அவதானிப்பாளர்களாகச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேற்படி சமர்ப்பணத்தை கருத்திற்கொண்ட கௌரவ நீதிமன்றம் குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கான மீள் திட்ட வரைபை கெளரவ மன்றிற்குச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளையாக்கியதோடு அடுத்த தவணைத் தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும் கட்டளை விடுத்திருந்ததோடு வழக்கு ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.