இலங்கைககான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல்அமெரி, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கிடையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் (13) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர், குறிப்பாக பாதுகாப்பு உற்பத்தி, சைபர் பாதுகாப்பு, தகவல் பகிர்வு மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது பணிபுரிந்துவரும் இலங்கையர்களினால் வழங்கப்படும் பாரிய மனித வளத்தின் பங்களிப்புகள் தூதுவரால் பாராட்டப்பட்டதுடன், தனது நாட்டின் வளர்ச்சியில் இலங்கையர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் தூதுவருக்கு பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.