இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் சூழலில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளது.
சர்வதேச அளவில் கடும் கண்டனங்களுக்கு மத்தியில் காசா நகரில் தரை வழி படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் இஸ்ரேலிய படை நகரில் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
பல டஜன் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் காசாவின் பிரதான குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக உள்ளூர் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் கவச வாகனங்கள் காசா நகரின் வடக்கே உள்ள ஷெய்க் ரத்வான் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த முன்னேற்றத்தை பாதுகாக்கும் வகையில் இஸ்ரேலிய படை பீரங்கி குண்டுகள் மற்றும் புகை குண்டுகளை வீசி அடர்ந்த புகைக்கு மத்தியில் முன்னேற ஆரம்பித்துள்ளன.
ஷெய்க் ரத்வான் பகுதியில் போருக்கு முன்னர் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வசித்து வந்தனர். இந்த பகுதி காசா நகரில் அதிக சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது.
காசா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என இஸ்ரேல் வர்ணித்துள்ளது. இங்குள்ள 3,000 வரையிலான ஹமாஸ் போராளிகளை தோற்கடிப்பது மற்றும் பணயக்கைதிகளை விடுப்பதற்கே படை நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. சிறுவர்களை பாதுகாப்போம் மற்றும் ஒக்ஸ்பாம் உட்பட 20 இற்கும் அதிகமான பிரதான உதவி நிறுவனங்கள், ‘காசாவில் நிலவும் மனிதாபிமானமற்ற நிலை மனசாட்சிக்கு விரோதமானது’ என்று எச்சரித்துள்ளன.