வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணம் விஜயம் செய்தார்.
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த அபிவிருத்தி திட்டங்கள் அங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம் திறந்து வைப்பு
யாழ்ப்பாண மக்களின் நீண்டகால குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் வகையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள், பொதுமக்கள் அரசாங்கத்துடனான அனைத்து பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் (Online) மேற்கொள்ளும் வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிட்டார்.
இலத்திரனியல் மயப்படுத்தப்படும் யாழ் நூலகம்
யாழ்ப்பாண நூலகத்தை இலத்திரனியல் நூலகமாக (e-Library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, யாழ்ப்பாண பொது நூலகத்திற்காக jaffna.dlp.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒன்லைன் ஊடாக வாசிக்க வாய்ப்பளிக்கும்.
யாழ்ப்பாண மக்களின் பெருமையின் அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாண பொது நூலகம், ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகங்களின் தொகுப்பைக் கொண்ட நூலகமாகும். பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான மக்களால் தினமும் பயன்படுத்தப்படுகிறது.
யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு ஒருங்கிணைந்த நூலக முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் அட்டை பிரவேச வசதி மற்றும் விசேட தேவை உள்ளவர்களுக்கு உதவி தொழில்நுட்பத்துடன் கூடிய விசேட அலகும் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் திட்டத்திற்காக ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
மின் நூலகத் திட்டத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைத்த ஜனாதிபதி, அதன் வாசிப்பு அறை மற்றும் புத்தகம் வழங்கும் பிரிவுக்கும் விஜயம் செய்த அதே வேளையில், பணியாளர்களுடன் சுமூகமாக உரையாடலில் ஈடுபட்டார்.
சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!