இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
பலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது.
தற்போது வரை இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
காசாவின் மையப் பகுதியை நோக்கி இரண்டு படைப் பிரிவுகள் முன்னேறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. வடக்கு காஸா, மத்திய காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாக படையெடுத்து வருகின்றன. தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இது ஒரு இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.காஸா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக சென்னை புதுப்பேட்டை முதல் எழும்பூர் வரை 1000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் பாலஸ்தீனத்தின் தந்தை யாசர் அராபத் அணிந்திருந்த துண்டை நினைவுபடுத்தும் வகையிலான துண்டுகளை அணிந்தபடி விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
