நேபாள அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் சர்மா ஒலி அழைப்பு விடுத்துள்ளார்.
நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் நேபாள அரசின் ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் காத்மண்டுவில் திங்கள்கிழமை திடீரென போராட்டத்தைத் தொடங்கினர்.
சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை திங்கட்கிழமை இரவு நீக்கப்பட்ட போதிலும், பிரதமரைப் பதவி விலகக் கோரி செவ்வாய்க்கிழமையும் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
காத்மண்டுவில் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்கள், சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேபாள விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தற்போது பதவி விலகி உள்ளார். காத்மாண்டுவை உலுக்கி வரும் இளைஞர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் இரண்டு முக்கிய அமைச்சர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மிகப்பெரும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதனிடையே போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஒலி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கடினமான சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.