நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு விழாவை, கொழும்பு பல்கலைக்கழகக் கலைத்துறையின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகப் பிரிவு விமர்சையாக நடத்தியது.
இந்நிகழ்வு இன்று (11) கலைப் பீட வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
அரபு மொழியில் ஆழமான புரிதலையும் தேர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக நவீன அரபு டிப்ளமோ பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் அடித்தளத்தையும் வளர்ச்சியையும் அமைத்தவர், நிறுவனர் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய பேராசிரியர் என். கஃபூர்தீன் ஆவார்.
பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி மூத்த பேராசிரியர் லசந்த மனவாடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு அல்-ஹாஃபில் எம்.ஐ.எம். மொஹமட் அவர்களின் அல்குர்ஆன் திலாவத்துடன் தொடங்கிது.
நிகழ்வில், வரவேற்புரை அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் யூ.எல்.ஏ. அமீர் அவர்களால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் கௌரவ விருந்தினராக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஐ. எம். கருணாதிலக்க கலந்து கொண்டு விழாவை உத்தியோகபூர்வமாகத் தொடங்கினார்.
நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியாக, நிகழ்ச்சியை ஒருங்கமைத்த பாடநெறியின் நிறுவனர் பேராசிரியர் என். கஃபூர்தீன் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளரும், சிங்களத்துறைப் பேராசிரியருமான சந்தகோமி கோப்பரஹேவாவை அறிமுகப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து , சிறப்புரை ஆற்றிய சந்தகோமி கோபரஹேவா அவர்களின் ஆழமான உரை, பல்துறை கல்வியின் அவசியத்தையும் பன்மொழிக் கற்றலின் மதிப்பையும் வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கலைப் பீட பீடாதிபதி மூத்த பேராசிரியர் மனவாடு, டிப்ளோமா பட்டதாரி மாணவர்களின் பெயர்களை அறிவிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஐ. எம். கருணாதிலக்க
சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில், இஸ்லாமிய நாகரிகப் பிரிவு மூத்த விரிவுரையாளர் எம்.எம்.எம். சபீர் அவர்களால் நன்றி உரை வழங்கப்பட்டது.
இப்பாடநெறியானது அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற மௌலவி பட்டதாரிகளுக்கும் சாதாரண தர மற்றும் உயர்தர பாடநெறிகளில் அரபுமொழியை கற்கும் மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை பெறவுள்ளோருக்கும் பயனுள்ள வகையில் இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.