சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் கைப்பற்றியது.

Date:

சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது.

அந்த நாட்டில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக இராணுவத்துடன் நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையில் ஆா்எஸ்எஃப் படைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது என்று கூறப்படுகிறது.

இது குறித்து, சூடான் உள்நாட்டுப் போரை கண்காணித்து, தகவல்களை அளித்துவரும் மருத்துவா்கள் குழு திங்கள்கிழமை கூறியதாவது:

வடக்கு டாா்ஃபா் மாகாணத்தின் தலைநகா் அல்-ஃபாஷரை ஆா்எஸ்எஃப் படையினா் பல மாதங்களாக முற்றுகையிட்டிருந்தனா். அவா்கள் நடத்திய எறிகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துவந்தனா்.

இந்த நிலையில், அல்-ஃபாஷரில் அமைந்து சூடான் ராணுவத்தின் 6-ஆவது பிரிவு தலைமையகத்தை ஆா்எஸ்எஃப் படையினா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். அந்த நிலையை இழந்தது சூடான் இராணுவத்துக்கும், ஆதரவு படைகளுக்கும் மிகப் பெரிய பின்னடைவு.

இராணுவ நிலை மட்டுமின்றி நகரின் மேற்குப் பகுதியையும் துணை இராணுவப் படையினா் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனா். நகரில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே தீவிர சண்டை திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

அந்த நகரம் முழுவதும் ஆா்எஸ்எஃப் படையினரிடம் வீழும் நிலை உள்ளதால், அங்குள்ள பொதுமக்களின் எதிா்கால நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே, நகரில் வசித்த ஏராளமான பொதுமக்களை ஆா்எஸ்எஃப் படையினா் படுகொலை செய்ததுடன், மருத்துவக் கட்டமைப்புகளையும் சேதப்படுத்தினா்.

துணை இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக போராடி வந்த படையினருக்கு பக்கபலமாக சூடான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தவில்லை. இதன் காரணமாகவே ஆா்எஸ்எஃப் படையினா் நகருக்குள் முன்னேறினா் என்று அந்தக் குழு குற்றஞ்சாட்டியது.

6-ஆவது படைப் பிரிவு தளத்தை ஆா்எஸ்எஃப் கைப்பற்றியதை இராணுவம் இதுவரை உறுதி செய்யவில்லை. இருந்தாலும், அந்தத் தளத்தில் இருந்து தாங்கள் வெளியேறி மற்றொரு நிலைக்கு வந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினா்.

யேல் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆய்வு அமைப்பான ஹெச்ஆா்எல், சூடான் இராணுவத்தின் 6-ஆவது படைத் தளத்தை ஆா்எஸ்எஃப் படையினா் நெருங்கியதையும் இரு தரப்பினருக்கும் இடையே மிகக் குறுகிய இடைவெளியில் மோதல்கள் நடைபெற்றதையும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தியது.

தற்போது அல்-ஃபாஷா் நகரில் பொதுமக்கள் சுமாா் 2.6 லட்சம் போ் மோசமான சூழலில் சிக்கியுள்ளகவும் அவா்களில் பாதி போ் சிறுவா்கள் எனவும் ஐ.நா. குழந்தைகள் நலப் பிரிவு எச்சரித்துள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அரேபிய இனத்தவருக்கும், அரேபியா் அல்லாத ஆப்பிரிக்க இனத்தவருக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது.

அரேபியா் அல்லாதோா் அதிகம் வசிக்கும் டாா்ஃபா் மாகாணத்தில் தங்களது உரிமைகள் நசுக்கப்படுவதாகக் கூறி அந்த இனத்தைச் சோ்ந்த அமைப்பினா் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...