புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் (Individual Investor Category) கீழ் இலங்கை தனது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை ஜேர்மனின் பிரஜையான கலாநிதி ப்ரே ட்ரெக்ஸ்செல் (Dr. Prey Drechsel) என்பவருக்கு வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் 5 வருட வதிவிட விசா பெறுவதற்கு அமெரிக்க டொலர் 100,000 (அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயம்) முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 10 வருட வதிவிட விசா பெறுவதற்கு அமெரிக்க டொலர் 200,000 (அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயம்) முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விசா திட்டம், முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் வாழ்வதற்கும், தங்கள் நிதியை முதலீடு செய்வதற்கும் ஒரு நேரடியான மற்றும் இலகுவான பாதையை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.