பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான அத்தியாவசிய பிறீமா உற்பத்தி உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான நேரத்தில் உதவிகளை வழங்கும் வகையில், பயனுள்ள வகையிலும் சரியான முறையிலும் இவற்றை விநியோகிப்பதை உறுதி செய்யும் வகையிலும், பாதுகாப்பு அமைச்சு மூலம் இந்த நிவாரண முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக, பிறீமா குழுமம் ஆனது, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பிறீமா உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. இந்தத் தொகுதிகள் பலத்த சேதமடைந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்படவுள்ளன. அன்றாட வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் ஆதரவாக அமையும் என்பதுடன், மீட்பு முயற்சிகள் தொடரும் இவ்வேளையில் அவர்களுக்கு உதவி கிடைப்பதையும் உறுதி செய்யும்.
இந்நன்கொடைகளை, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த நன்கொடை கையளிப்பின் போது, Prima Group Sri Lanka சார்பில் Ceylon Agro Industries Limited நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன மற்றும் Ceylon Grain Elevators PLC பொது முகாமையாளர் சஞ்சீவ பெரேரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக இந்நன்கொடையை வழங்கி வைத்தனர்.
பிறீமா குழுமமானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மக்களுடன் உறுதுணையாக நிற்கிறது. இந்த நன்கொடையானது சவாலான காலங்களில் நாட்டிற்கு அது செலுத்தும் பரந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், இக்குழுமமானது அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதிலும், தற்போது இடம்பெற்று வரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறது.
