இலங்கை முஸ்லிம்களின் தேசிய மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக, கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் எழுதிய நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இது குறித்த விரிவான பார்வைகளையும், மொழிகளைக் கடந்து இந்த வரலாற்றுத் தகவல்கள் சிங்கள வாசகர் பரப்பைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தையும் சமூகச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான சிராஜ் மசூர் அவர்கள் தனது முகப்புத்தகப் பதிவில் மிக அழகாகப் பகிர்ந்துள்ளார்.
நூலாசிரியரின் ஆளுமை, மொழிபெயர்ப்பாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் நுணுக்கமான உழைப்பு மற்றும் இந்த முயற்சிக்குத் துணையாக நின்ற குழுவினரைப் பாராட்டி அவர் எழுதியுள்ள அந்தப் பதிவு வருமாறு:
நண்பர் கலாநிதி ரவூப் ஸெய்னின் Zain Rauff ‘இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்பு’ எனும் நூல் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
இப்படி மொழியின் எல்லைகளைத் தாண்டி விரியும்போது, புதுப்புது வாசகப் பரப்புகளை ஒரு எழுத்தாளன் சந்திக்கிறான்.
இதுவரை 70 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் ஒரு எழுத்தாளருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய கௌரவம் இது என்பேன்.
மேற்படி நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு, ‘அபிமானவத் இதிஹாசயக லாங்கேய முஸ்லிம் லகுண’ (අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ) என்ற பெயரில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
பஹன வெளியீட்டகம் (Pahana Publishers), கொழும்பு BMICH வளாகத்தில் அமைந்திருக்கும் BCIS இல் இதனை சிறப்பாக வெளியிட்டு வைத்தது.
புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, இலங்கை நாட்டின் வளர்ச்சியின் பின்னேயுள்ள முஸ்லிம்களது வரலாற்றுப் பங்களிப்பை சிலாகித்துப் பேசினார். சமூகங்களிடையே உறவும் ஊடாட்டங்களும் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
நிகழ்வில் எல்லோரையும் கவர்ந்த சிறப்புரை, பேராசிரியர் ரோஹித்த தசநாயக்கவுடையது. பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவர் அவர். இலங்கையுடனான அறபு-முஸ்லிம் வரலாற்றுத் தொடர்புகள் குறித்த ஆழமான ஈடுபாடுடையவர். அதை அழகுற எடுத்துரைத்தார்.
கலாநிதி தம்மிக பன்மொழி ஆற்றல் மிக்கவர். கேரளப் பல்கலைக்கழக மொ
கலாநிதி தம்மிக்கவுடனான தொடர் ஊடாட்டத்தில், பல விடயங்கள் குறித்து நாம் உரையாடி வந்திருக்கிறோம்.
இலங்கையில் அருகி வரும் மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர்.
குறிப்பாக, முஸ்லிம்கள் குறித்த பண்பாட்டுப் புரிதல் (Cultural Understanding) மிகுந்தவர் அவர்.
நிகழ்வில் உரையாற்றும்போதும் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். 20, 30 வருடங்களுக்கு முன் இஸ்லாம் பற்றி சிங்களத்தில் எழுதப்படுவது குறைவு என்று சொன்ன அவர், இஸ்லாத்தின் சமய, பண்பாட்டு அடையாளங்களை மொழிபெயர்க்கும்போது, மொழி மரபுகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் விளக்கினார்.
‘கிப்லா’ என்ற சொல்லை ‘கிப்லாவ’ என்று சிங்களத்தில் மொழிபெயர்த்திருப்பதை உதாரணத்திற்கு சுட்டிக் காட்டினார்.
அந்த வகையில் கலாநிதி தம்மிக்கவின் இந்த முயற்சியை- கடினமான உழைப்பை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம்.
‘லாங்கேய முஸ்லிம்’ என்று ஏன் வாருகிறது? பொதுவாக ‘லாங்கீய’ என்றுதானே பாவிக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன். ‘லாங்கீய’ என்பது இலக்கண வழு. ‘லாங்கேய’ என்பதே சரியான பதம் என்றார்.
இந்த மொழியாக்க முயற்சிக்கு ஒரு வாருடத்துக்கு மேல் உழைத்திருக்கிறார்கள். இதனை சிங்களத்திற்கு மொழிபெயர்க்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் Mujeeb Salih.
அவரும் ஊடகவியலாளர் ஹில்மி முஹம்மதும் லக்மிணி நதீஷாவும் ஒரு குழுவாக இயங்கி, தம்மிக்கவின் மொழியாக்கத்திற்கு துணை நின்றிருக்கிறார்கள்.
நிகழ்வில் சுகயீனம் காரணமாக றவூப் ஸெய்ன் கலந்துகொள்ளவில்லை.
