நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் புத்தளம் மாவட்டத்தின் கரைத்தீவு பிரதேச மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் சில பகுதிகளில் வெள்ளநீர் முழுமையாக வற்றாமையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகிறது.
இந்தவகையில் கரைத்தீவு பிரதேசத்தின் சின்னநாகவில்லு என்ற பகுதி தண்ணீரில் முழுமையாக மூழ்கி இதுவரை அப்பகுதி மக்கள் வேறு இடங்களில் வாழ்ந்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.
இந்நிலையில் பல்வேறு தொண்டு மற்றும் சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் ஏனைய நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் கரைத்தீவு பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளை முறையாகத் தொடரும் வகையில் அவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாட்டை கொழும்பிலுள்ள பஹன மீடியா நிறுவனம் பாடசாலையோடு தொடர்பு கொண்டு மேற்கொண்டது.
அந்தவகையில் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாதிக்கப்பட்ட 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் நேற்று (05) மாலை பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் பொறுப்பாசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பஹன மீடியாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் உரையாற்றுகையில்,
“புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ளாமல் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒழுக்கம் பண்பாடு சார்ந்த விவகாரங்களில் கூடுதலாக கவனம் மேற்கொள்ளப்பட வேண்டும் குறிப்பாக பிள்ளைகளை ஆன்மிக ரீதியாக நெறிப்படுத்த வேண்டும்.
அதற்குரிய ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகமும் பெற்றோரும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்ற கருத்தை அவர் முனன்வைத்தார்.
தொடர்ந்து பாடசாலை உபகரணங்களை பஹன மீடியாவின் நிறைவேற்று பணிப்பாளர் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர் அல்ஹாஜ் முஸம்மில் உட்பட பாடசாலை முகாமைத்துவ சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



