காசா மீதான போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினர் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மற்றும் மன உளைச்சல் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாரெட்ஸ் (Haaretz) நாளிதழ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் கட்டாய இராணுவப் பணியில் இருந்த 22 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த 15 ஆண்டுகளில் பதிவான மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
காசாவில் நடக்கும் தீவிர போர் மற்றும் அங்குள்ள கொடூரமான சூழல்கள் வீரர்களிடையே பாரிய மன அழுத்தத்தை (PTSD) ஏற்படுத்தியுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையிலான காலப்பகுதியில் சுமார் 279 வீரர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இஸ்ரேலிய பாராளுமன்றக் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த ‘தற்கொலை தொற்று’ குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம், வீரர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கவும், மனநலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியவும் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
காசா மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், போர்க்களத்தில் வீரர்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளைத் தாண்டி, இவ்வாறான உள்நாட்டு தற்கொலைச் சம்பவங்கள் இஸ்ரேலிய சமூகத்திலும் இராணுவக் கட்டமைப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
