16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின் அரசின் திட்டத்திற்கு, சர்வதேச தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் விமர்சனங்களை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார்.
சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்குகளைத் தொடங்குவதைத் தடை செய்ய பிரதமர் சான்செஸ் திட்டமிட்டுள்ளார். இந்த முடிவை எக்ஸ் (X) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த எதிர்ப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் சான்செஸ்,”இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் (Tech Moguls) குரைத்துக் கொண்டே இருக்கட்டும். அவர்கள் இப்படி விமர்சிப்பதே நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான அடையாளம். எங்களின் முன்னுரிமை லாபம் அல்ல, குழந்தைகளின் எதிர்காலமே முக்கியம், என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் சிறுவர்கள் ஆபாசமான மற்றும் வன்முறையான உள்ளடக்கங்களைக் காண்பதைத் தடுக்கவும், இணையவழி அச்சுறுத்தல்களில் (Cyberbullying) இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. பெரும் நிறுவனங்களின் வருமானத்தை விட குழந்தைகளின் பாதுகாப்பே மேலானது என்பதில் ஸ்பெயின் அரசு உறுதியாக உள்ளது.
