தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அந்த மறுசீரமைப்புத் திட்டங்கள் உண்மையில் பயனுள்ளதா இல்லையா, அவசியமானதா இல்லையா என்பது பற்றிய ஒரு தெளிவூட்டல் புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் 12-ஆம் திகதி புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
“தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு புதிய கல்விச் சீர்திருத்தம் தேவையா இல்லையா?” என்ற தலைப்பில் நடைபெற்ற இக் கலந்துரையாடலை புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் அபிவிருத்திப் பிரிவுக்கான பிரதிப் பணிப்பாளர் திரு. M.A.M. அனீஸ் (SLEAS-1) வழங்கினார்.
2023-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமையின் காரணமாக ஏற்பட்டுள்ள கல்வித்துறை சார்ந்த பல்வேறு பாதிப்புக்களை அடையாளப்படுத்திய இந் நிகழ்வு, மூன்று ஆண்டுகள் கழித்தாவது 2026-ஆம் ஆண்டில் இவ்வாறான ஒரு மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டிருப்பது காலத்தின் தேவை என்பதை இக் கலந்துரையாடல் ஊடாக பிரதிப் பணிப்பாளர் அனீஸ் அழகாக விளக்கப்படுத்தினார்.
அத்துடன், நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்ற இக் கல்விச் சீர்திருத்தங்கள் என்னென்ன வகையில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன, எத்தனை வருடகாலப் பகுதிக்குள் அவை நடைமுறைக்கு வருகின்றன, அதனால் வருகின்ற மாற்றங்கள் மற்றும் நன்மைகள் யாவை என்பது பற்றிய விளக்கங்களும் இக் கலந்துரையாடலின் போது பணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது.
பயனுள்ள இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் மதத் தலைவர்களும் உறுப்பினர்களும் பிரதிப் பணிப்பாளரிடம் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த சந்தேகங்களையும் விளக்கங்களையும் தெளிவாகக் கேட்டுப் பெற்றுக்கொண்ட ஒரு சிறப்பான நிகழ்வாகவும் இந் நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் பிரதிப் பணிப்பாளர் அனீஸ் வழங்கிய விளக்கத்தைப் பாராட்டியதோடு, தற்போது அரசாங்கம் முன்னெடுக்கின்ற கல்விச் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதற்கான ஒரு தீர்மானமும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.
புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் பிரதான மதத் தலைவர்கள்
உள்ளிட்ட பல சர்வமதத் தலைவர்களும் செயற்குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தளம் பிரதேசத்தில் திருப் பணியாற்றிய அருட் தந்தை திலங்க அவர்கள் வெளிநாட்டுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கலந்தாலோசிக்கப்பட்டதுடன் அவருடனான குழுப் புகைப்படமும் எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

