அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களைத் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அண்மையில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வரை தமிழ் மொழியில் வெளியாகவில்லை என விண்ணப்பிக்கத் தயாராக உள்ள தமிழ் பேசும் பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த மொழிபெயர்ப்புத் தாமதம் காரணமாகத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சரியான நேரத்தில் தகவல்களைப் பெற முடியாமல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ், ஊடகத்துறை அமைச்சருக்கு எழுத்துமூலம் புகார் அளித்துள்ளார்.
இந்த மொழிப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
