அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது உடலை அகற்றும் போது ஊடகங்களை திசைதிருப்புவதற்காக ஒரு “நாடகமே” அரங்கேற்றப்பட்டதாக தற்போது வெளியாகியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த எப்ஸ்டீனின் மரணம் குறித்து ஏற்கனவே பல மர்மங்கள் நிலவி வரும் நிலையில், அவரது உடலை ரகசியமாக கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் கையாண்ட உத்திகள் இப்போது பேசுபொருளாகியுள்ளன.
வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, எப்ஸ்டீனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஊடகங்களின் கவனத்தை திசைதிருப்ப அதிகாரிகள் ஒரு போலி உடலை உருவாக்கியுள்ளனர். இது குறித்து அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஊடகங்களை திசைதிருப்பும் நோக்கில், பெட்டிகள் மற்றும் போர்வைகளைப் (Sheets) பயன்படுத்தி மனித உடலைப் போன்ற ஒரு வடிவம் உருவாக்கப்பட்டது. இது ஒரு வெள்ளை நிற மருத்துவ பரிசோதகர் வாகனத்தில் (OCME vehicle) ஏற்றப்பட்டது. ஊடகத்தினர் அனைவரும் அந்த வாகனத்தையே பின்தொடர்ந்து சென்றனர். அதே சமயம், எப்ஸ்டீனின் உண்மையான உடல் வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற வாகனம் எவராலும் கவனிக்கப்படாமல் ரகசியமாக அங்கிருந்து வெளியேறியது.”
2019 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சதி கோட்பாடுகள் (Conspiracy Theories) நிலவி வருகின்றன.
அதிகாரிகள் ஏன் இவ்வளவு ரகசியமாக உடலை அகற்ற வேண்டும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஊடகங்களின் பார்வையில் இருந்து உடலை மறைக்க மேற்கொள்ளப்பட்ட இந்த தந்திரமான நடவடிக்கை, அவரது மரணத்தில் ஏதோ ஒரு பெரிய மர்மம் மறைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் மத்தியில் மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய தகவல்கள், எப்ஸ்டீன் விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீடு எந்த அளவிற்கு இருந்தது என்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
