டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் ஏற்கனவே குறித்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதில் 15,000 ரூபாய் திறைசேரியில் இருந்தும், 10,000 ரூபாய் ஜனாதிபதி நிதியத்தினாலும் வழங்கப்படும்.
அதன்படி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் குறித்த நிதி உதவியை விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
