புத்தளம் – அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவனைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புத்தளம், தில்லையடி ரத்மல்யாய 4-ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று (பெப்ரவரி 21) இரவு 9.00 மணியளவில் தனது சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற அப்துல் லதீப், வீடு திரும்பாத நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்தார்.
தில்லையடி, ரத்மல்யாய – அல்காசிமி சிட்டி பிரதான வீதியூடாக கல்லடி நோக்கிச் செல்லும் உள்வீதியில் உள்ள தோட்டப்பகுதிக்கு அருகில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இக்கொலையைச் செய்த சந்தேகநபர், சாரதியிடமிருந்த பணத்தைத் திருடிக்கொண்டு, அவரது முச்சக்கர வண்டியையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளைத் தீவிரப்படுத்திய புத்தளம் காவல்துறையினர், ரத்மல் ஓயா பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரால் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி அல்காசிமி சிட்டியின் பின்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் எதற்காக இக்கொலையைச் செய்தார் மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இவர் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் A.L. இர்பான் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
