இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா புறப்படவுள்ளார்.
மனிதகுலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமர் தலைமையில் இம்மாநாடு நடைபெறுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரும் 19ஆம் திகதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
5 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்களும், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பாதை மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
