காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள “அமைதிக் குழுவில்” (Board of Peace) முழுநேர உறுப்பினராக இணைய மெக்சிகோ மறுப்பு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்த முதல் கூட்டத்தில், மெக்சிகோ சார்பில் ஐநா-வுக்கான அந்நாட்டு தூதர் பார்வையாளராகமட்டுமே கலந்து கொள்வார் என்று ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“நாங்கள் பலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கிறோம். அமைதிக்கான ஒரு குழுவில் பாதிக்கப்பட்ட தரப்பான பலஸ்தீனத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அமைதி வாரியம் அவ்வாறு அமைக்கப்படவில்லை.”என்றார்.
இந்த அமைதிக் குழுவில் இஸ்ரேல் உறுப்பினராக உள்ள நிலையில், பலஸ்தீனம் சேர்க்கப்படவில்லை என்பதை மெக்சிகோ சுட்டிக்காட்டியுள்ளது.
பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கும் மெக்சிகோ, இரு நாடுகளின் பங்களிப்பும் இல்லாமல் எடுக்கப்படும் அமைதி முயற்சிகள் முழுமையடையாது எனக் கருதுகிறது.
ஏற்கனவே இந்தியா மற்றும் வத்திக்கான் போன்ற நாடுகள் இந்த குழுவில் சேர ஆர்வம் காட்டாத நிலையில், லத்தீன் அமெரிக்காவின் முக்கிய நாடான மெக்சிகோவின் இந்த முடிவு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
