இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை) மாலை தென்பட்டதை அடுத்து, நாளை பெப்ரவரி 19, வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிறைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு ரமழான் நோன்பு தொடங்குவதில் நாடுகளுக்கு இடையே ஒரு நாள் வித்தியாசம் காணப்படுகிறது:
இன்று (18) நோன்பு தொடங்கிய நாடுகள்: சவூதி அரேபியா, ஜிபூட்டி, ஏமன், கத்தார், பஹ்ரைன், பலஸ்தீனம், சூடான், குவைத், ஈராக், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.
நாளை (19) நோன்பு தொடங்கும் நாடுகள்: இலங்கை, எகிப்து, துருக்கி, துனிசியா, ஜோர்டான், லிபியா, இந்தோனேசியா, ஈரான், ஓமான், சிங்கப்பூர், சிரியா மற்றும் அல்ஜீரியா.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பை முன்னிட்டு, இன்று இரவு முதல் பள்ளிவாசல்களில் விசேட ‘தராவீஹ்’ தொழுகைகள் ஆரம்பமாகின்றன.
