இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலைக் கண்டித்து, இன்று தமிழகத் தலைநகர் சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டமும் எழுச்சிப் பேரணியும் நடைபெற்றது.
தமிழ்நாடு ஷியா ஜமாத் சார்பில் விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று, குறுகிய நேரத்திற்குள் சென்னையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
தமிழ்நாடு ஷியா காஜி குலாம் முகம்மது மெஹ்தி கான் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி தலைமையிலான நிர்வாகிகள் களமிறங்கி போராட்டத்திற்கான அடிப்படை ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
ராயப்பேட்டை அமிருன்னிசா கபரஸ்தான் அருகே ஆண்களும், பெண்களும் பெரும் கொந்தளிப்போடு திரண்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் பேரணியை மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மற்றும் திராவிட இயக்கப் பிரமுகர் மல்லை சத்யா ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
மேலும் இப்போராட்டத்தில், கோனிகா பஷீர் ஹாஜியார் (இந்திய தேசிய லீக்), மௌலவி மன்சூர் காசிஃபி (முஸ்லிம் கூட்டமைப்பு), வன்னியரசு & ஷாநவாஸ் MLA (விசிக) இடதுசாரி செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் பங்கேற்று அமெரிக்காவிற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர்.
போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதியில் பல கடைகள் மூடப்பட்டு, பொதுமக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றனர்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி படுகொலைக்கு எதிராக இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் முக்கியமான எழுச்சிப் பேரணிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

