மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) சர்வதேச நாடுகளுக்கு ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதர்களைத் தங்கள் நாடுகளை விட்டு உடனடியாக வெளியேற்றும் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரானிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதர்களை வெளியேற்றினால், அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்காக ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் திறந்து விடுவோம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளே வரவும் வெளியேறவும் முடியும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. தற்போது நிலவும் போர்ச் சூழலால் இந்த வழித்தடம் முடக்கப்பட்டுள்ளதால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு, மேற்கத்திய நாடுகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளை, எண்ணெய் போக்குவரத்தைத் தடுத்தால் ஈரான் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
