சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் யூத் கிளப் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் சகவாழ்வு இப்தார் நிகழ்வு நேற்று புத்தளம் மல்ஹாஸ் வரவேற்பு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கும், சமாதானத்துக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாகக் காணப்படுகின்ற இளைஞர்களை சரியான பாதையில் திசைதிருப்புவதன் ஊடாக நிரந்தரமான அபிவிருத்தியைக் கட்டியெழுப்பும் நோக்கில் தற்போதைய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது தெரிந்ததே.
இந்த வரிசையில் முஸ்லிம்கள் அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் புனித ரமலான் இறுதிப் பகுதியாகிய இத்தருணத்தில் எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகளை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற பாரம்பரிய நிகழ்வுகளைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு மிகச்சிறந்த ஏற்பாடாக நேற்றைய இப்தார் நிகழ்வு அமைந்திருந்தது.
கிராஅத் உட்பட கலாசார நிகழ்வுகளோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாக நெறிப்படுத்தியதோடு நன்றியுரையை பெரும்பான்மைச் சமூகச் சேர்ந்த ஒரு யுவதி நிகழ்த்தினார்.
முற்றிலும் முஸ்லிம்களின் ஒரு ஆன்மீக நிகழ்வில் சகல இனங்களும் ஒன்றாக இணைந்து தங்களுக்கு இடையிலே அந்நியோன்யத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான மிகச்சிறந்த ஒரு அடையாளமாக இது அமைந்திருந்தது.
அத்துடன், இந்த நிகழ்வின் ஏற்பாட்டிலும் கூடச் சகல மதங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் மிகவும் உற்சாகமாகக் கலந்துகொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டச் சர்வமத அமைப்பின் நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்களோடு, பிரதம அதிதியாகப் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களும், கௌரவ அதிதிகளாகப் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான, முஹம்மது பைசல், அஜித் ஜிஹான், மற்றும் ஏனையோரும் கலந்து சிறப்பித்ததோடு, சிறப்பு அதிதியாக இலங்கைத் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன அவர்களும் புத்தளம் மாநகர மேயர் ரின்சாத் அஹமத் அவர்களும் பொறியியலாளர் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டை நல்ல திசையில் கொண்டு செல்லும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, அந்தந்தச் சமூகங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் முழுமையாகப் பாதுகாத்த நிலையில், அவை குறித்த சரியான விளக்கங்களையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமாயின், இந்த நாட்டில் மிகச்சிறந்த ஒரு எதிர்காலம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

