மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் கையிருப்புத் தேவைகளை நிர்வகித்தல், சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு போன்ற துறைகளிலும், உணவுப் பாதுகாப்பு குறித்து ஏற்படக்கூடிய நிலைமைகள் மற்றும் இதன் மூலம் இந்நாட்டில் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதை நிர்வகிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்த சூழ்நிலையால் இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தற்போதைய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தேவையான கையிருப்புகளைப் பேணுவது மற்றும் அதனை நிர்வகித்தல், உலக சந்தையில் ஏற்படவிருக்கும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த நிலைமைகளை நிர்வகிப்பது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
எரிவாயு கையிருப்புகளைப் பேணுவதற்கு போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாததால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவது குறித்தும், அதற்காக பின்பற்றக்கூடிய குறுகிய கால மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற இடங்கள் மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, இலங்கையுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் கப்பல் நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் தற்போது போதுமான உணவுக் கையிருப்பு உள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
