மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அன்னாரின் மறைவு ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார்.
நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேசப் புகழ்பெற்ற முன்னோடியாகத் திகழ்ந்த பேராசிரியர் ஷெரீப், அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்காற்றியவராகவும் போற்றப்படுகிறார்.
கொழும்பு ஸாஹிரா மற்றும் றோயல் கல்லூரிகளில் கல்வி பயின்று, கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பிரித்தானியாவிலும் உயர் மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடப் பேராசிரியர், மருத்துவ பின்படிப்பு நிறுவனப் பணிப்பாளர் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எனப் பல உயர் பதவிகளை வகித்து சேவை புரிந்துள்ளார்.
தனது தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால், நோயாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது காட்டிய கருணை, பணிவு மற்றும் தன்னலமற்ற சேவைக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் எனவும், குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூகத்தினருக்கும் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையை நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டுள்ள ரவூப் ஹக்கீம், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துள்ளார்.
