அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அவரைச் சந்தேகநபராகப் பெயரிடுவதற்குப் போதுமான சாட்சியங்கள் உள்ளனவா என நீதவான் வினவியபோது, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அதற்கான சாட்சியங்கள் இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
ஒரு நகர்வு மனுவின் (Motion) ஊடாகவே சுரேஷ் சலையை மூன்றாவது சந்தேகநபராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் பெயரிட்டது. இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருடன் மேலும் இருவர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான உணர்வுபூர்வமான தகவல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையொன்றைத் தாக்கல் செய்து அறிவித்துள்ளது.
இதேவேளை, சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
