இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்தினை வெளியிட்ட அவர், இலங்கையை ஒரு நட்பு நாடு என்று விவரித்ததோடு, ஈரான் தனது பங்காளிகளுடன் திறந்த மற்றும் ஆதரவான நிலைப்பாட்டைப் பேணி வருகிறது என்றும் தெரிவித்தார்.
அதற்கு அமைவாக இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் அணுகக்கூடியதாக உள்ளது.
அத்தகைய நாடுகளின் தேவைகளை எளிதாக்க ஈரான் தயாராக உள்ளது என்றும் இதன்போது உறுதிப்படுத்தினார்.
அத்துடன், இலங்கைக்குத் தேவைப்பட்டால், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையே வலுவான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
அதேநேரம், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் ஈரான் விரிவான உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது.
இன்றுவரை, அவர்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினைகள் குறித்தும் அறிக்கைகள் பதிவு செய்யப்படவில்லை, அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ் சுட்டிக்காட்டினார்.
