மத்திய கிழக்கின் முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால், உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் உயரும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் ஏழை நாடுகளின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட UNCTAD இன் விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
எரிசக்தி, உரம் மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதே உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாக அமையும். குறிப்பாக, உர விநியோகத்தில் ஏற்படும் தடை விவசாய உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கும் என அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணையின் பங்களிப்பு மிக முக்கியமானது என அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன:
கச்சா எண்ணெய்: உலக விநியோகத்தில் 38%, LPG எரிவாயு: உலக விநியோகத்தில் 29%, LNG (இயற்கை எரிவாயு): உலக விநியோகத்தில் 19%, உரம்: கப்பல் வழியாகக் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) இந்நீரிணை வழியாகவே பயணிக்கிறது.
இந்த நீரிணை ஊடாகப் பரிமாற்றப்படும் மொத்தத் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளுக்கே செல்கின்றன. இதன் காரணமாக, விநியோகத் தடை ஏற்பட்டால் அதன் நேரடித் தாக்கத்தை ஆசியப் பிராந்தியமே மிகக் கடுமையாக எதிர்கொள்ளும் என UNCTAD சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நெருக்கடியானது உலகளாவிய வர்த்தக ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு, நலிவடைந்த நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
