இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் தர்ம மண்டபத்தில் முஸ்லிம் சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வு கடந்த 14 ஆம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
‘தர்ம சக்தி’ அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இப்தார் நிகழ்வு, அந்த விகாரையில் தொடர்ந்து 7வது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அமரபுர நிக்காயவின் மகா நாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் நகர்ப்புற அபிவிருத்தி பிரதி அமைச்சர், கொலன்னாவை நகர சபைத் தலைவர் மற்றும் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வழக்கமாக பள்ளிவாசல்களில் நடைபெறும் இப்தார் நிகழ்வுகளில் பிற மதத்தவர்கள் கலந்துகொள்வதே வழக்கம்.
ஆனால், முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராண்ட்பாஸ் பகுதியில், ஒரு பௌத்த விகாரையிலேயே இஸ்லாமிய மத நிகழ்வு நடைபெற்றது உண்மையான இன ஒற்றுமைக்குச் சான்றாக அமைந்தது.
இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, புனித குர்ஆன் ஓதப்பட்ட பிறகு (கிரத்), அதன் பொருளை முஸ்லிம் அல்லாத ஒரு அறிஞரான ஓய்வுபெற்ற பிஷப் ஆசிரி பி. பெரேரா அவர்கள் தனது புரிதலுக்கு ஏற்ப விளக்கிக் கூறியது அனைவரையும் நெகிழச் செய்தது.
இனம், மதம் கடந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு துறந்த இந்த நிகழ்வு, இலங்கையர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் சுமுகமான உறவையும் மேம்படுத்த ஒரு பாலமாக அமைந்தது.

