இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ‘IRIS Bushehr’ என்ற ஈரானியக் கப்பலில் உள்ள பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரையிறக்கப்படுவார்கள் என்றும், அந்த கப்பல் திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த விவகாரம் தொடர்பில் பின்வரும் முக்கிய தகவல்களை வெளியிட்டார்:
ஈரானியக் கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் கொழும்புத் துறைமுகத்தில் தரையிறக்கப்படவுள்ளனர்.இதில் 53 அதிகாரிகள், 84 மாணவர் அதிகாரிகள் (Cadet Officers), 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் நலன்களைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகம் நாட்டின் பிரதான பொருளாதார மையமாக இருப்பதால், கப்பலை திருகோணமலைக்கு நகர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தரையிறக்கப்படும் பணியாளர்கள் அனைவரும் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
காலி கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு முந்தைய சூழல் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.
மார்ச் 9 முதல் 13 வரை மூன்று கப்பல்களை இலங்கையில் நிறுத்த ஈரான் அனுமதி கோரியிருந்தது. எனினும், இவ்வாறான விஜயங்களுக்கு நீண்ட இராஜதந்திர நடைமுறைகள் தேவைப்படுவதால் அது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதற்கிடையில், ஒரு ஈரானியக் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகவும், பெப்ரவரி 27 அன்று ஒரு மாலுமி காயமடைந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இலங்கையினால் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 4 ஆம் திகதி குறித்த கப்பல் தாக்கப்பட்டதாக அவசர சமிக்ஞை கிடைத்தவுடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை உடனடியாகச் செயற்பட்டது. இதில் 32 பேர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், 84 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
“நாங்கள் நடுநிலையானவர்கள், அதேநேரம் மனிதாபிமானம் மிக்கவர்கள். பல உயிர்கள் ஆபத்தில் இருப்பதை அறிந்தே எமது படையினர் உடனடியாகச் செயற்பட்டனர்.” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்கா போன்ற நாடுகளை அதிருப்திக்குள்ளாக்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இது போருக்கு ஆதரவளிக்கும் செயல் அல்ல என்றும், சர்வதேச உடன்படிக்கைகளின்படி உயிர்களைக் காக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த முடிவு இலங்கையின் சுயாதீனமான முடிவு என்றும், எந்தவொரு வெளிநாட்டின் அழுத்தத்திற்கும் அடிபணியாமல், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். பிப்ரவரி 26 முதல் இந்தக் கப்பல்கள் இலங்கையினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
