நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா அறக்கட்டளையின் (NIDA Foundation) “நடமாடும் சகவாழ்வுத் திட்டத்தின்” கீழ் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது.
“எமது தாய்நாட்டில் அமைதியையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்ச்சி, கடந்த மார்ச் 31 அன்று குருநாகல், வல்பொத்துவாவ ஜாமிஉல் ஹாய்ராத் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
கொபேகனே பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் உள்ளிட்ட சுமார் 50 அதிகாரிகள் பங்கேற்றனர். நுகவெல இளைஞர் படைப்பிரிவின் தலைவர், அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் என சுமார் 95 பேர் கலந்துகொண்டனர்.
பல்வேறு இன மற்றும் மதப் பின்னணிகளைக் கொண்ட இலங்கையர்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதே இந்த முன்முயற்சியின் முதன்மை நோக்கமாகும்.
நிதா அறக்கட்டளை மற்றும் கொபேகனே பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தத் திட்டம், இஸ்லாம் மதம் குறித்த தவறான கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு ஒரு சிறந்த களமாக அமைந்தது.
பங்கேற்பாளர்களுக்கு மதம் குறித்த தெளிவான மற்றும் துல்லியமான புரிதலை வழங்கியதோடு, சகவாழ்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

