முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிலிருந்து தேசிய ஷூரா சபைக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விதந்துரைகளை முன்வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க தேசிய ஷூரா சபை அதன் நிறைவேற்று குழு செயலகக் குழு மற்றும் சில முக்கிய சிவில் அமைப்புக்களது ஆலோசனைகளைப் பெற்று இந்த முன்மொழிவுகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்தது.
அது தேசிய ஷூரா சபையின் உறுப்பு அமைப்புகள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டதுடன் அவர்களது அங்கீகாரமும் அதற்காக பெறப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டதாகும்.
அது மாத்திரமன்றி இலங்கையின் முன்னணி உலமாக்கள் சிலருக்கு இந்த முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு அவர்களது ஆலோசனைகளும் பெறப்பட்டு இறுதி வடிவத்தை அது பெற்றதுடன் அவர்களது அங்கீகாரமும் அந்த அறிக்கைக்கு கிடைத்துள்ளது. மேற்படி அறிக்கை கடந்த 15.04.2026 அன்று நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.
தேசிய ஷூரா சபையால் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்:
திருமண வயது 18 ஆக நிர்ணயம்:
இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு இணையாக, முஸ்லிம் ஆண் மற்றும் பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாத்திரம், 16-18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு காழி நீதிபதிகள் குழுவின் அனுமதியுடன் திருமணம் செய்ய முடியும்.
மணமகளின் கையொப்பம் கட்டாயமாக்கல்:
திருமணப் பதிவின் போது மணமகனின் கையொப்பத்துடன், மணமகளும் தனது சம்மதத்தை உறுதிப்படுத்தி கையொப்பமிடுவதற்கான இடம் திருமணச் சான்றிதழில் ஒதுக்கப்பட வேண்டும். இது பெண்களின் சுதந்திரமான தெரிவை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகும்.
பலதார மணத்திற்கு முறையான கட்டுப்பாடுகள்:
இஸ்லாத்தில் பலதாரமணம் செய்து கொள்வதற்கான அனுமதி ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பலதாரமணம் புரிய விரும்பும் ஒருவர், தனது மனைவியர் அனைவரையும் சமமாக நடத்துவார் என்பதற்கான உறுதிப் பிரமாணத்தை(Solemn Declaration) காழி நீதிபதிகள் குழுவிடம் வழங்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் நட்டஈடு கோரும் அதிகாரம் பாதிக்கப்படும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
நவீனமயப்படுத்தப்பட்ட காழி நீதிமன்றங்கள்:
தற்போதைய காழி நீதிமன்ற முறையை மாற்றி, முழு நாடும் ஒன்பது வலயங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒவ்வொரு வலயத்திற்கும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ‘காழி நீதிபதிகள் குழு’ அமைக்கப்பட வேண்டும்.இந்த ஐவரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அங்கம் வகிப்பர்.
ஆண் ஒருவர் பிரதம காழியாக செயற்படுவதோடு இறுதி தீர்மானத்தையும் எடுப்பார்.இவர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்றி, விவாகரத்து மற்றும் பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பார்கள்.
மேற்படி அறிக்கைக்கு தேசிய ஷூரா சபையின் பின்வரும் முன்னணி முஸ்லிம் சிவில் அமைப்புகள் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளன.
1. தேசிய ஷூரா சபை
2. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனம்
3. அகில பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சங்கம்
4. . இலங்கை மலாய் மக்களின் மாநாடு
5. . ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி
6. . இலங்கை கதீப்கள் மற்றும் முஅத்தின்கள் சங்கம்
7. . ஸலாமா சங்கம்
8. அல்முஸ்லிமாத்
9. இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம்
10. அஹதிய்யா சம்மேளனம்
11. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்
12. சிலோன் முஸ்லிம் வாலிபர் சங்கம்
13. நாம் இலங்கையர் அமைப்பு
இவ்வறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய உலமாப் பெருமக்களது பெயர்கள்:
அஷ்-ஷேக் கலாநிதி M.L. முபாரக் (PhD) – பணிப்பாளர், தாருல் ஹுதா மகளிர் அரபு மற்றும் இஸ்லாமியக் கல்லூரி, மருதமுனை.
அஷ்-ஷேக் M.M.M. கரீம் (நத்வி) – அதிபர், நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி மற்றும் தலைவர், மஜ்லிஸ் ஷூரா – மூதூர்.
அஷ்-ஷேக் மஃஸூக் ஷஜீர் (உஸ்வி) – அதிபர், தாருல் கிராஅத் அரபுக் கல்லூரி, மாபோலை.
அல்-ஆலிமா டாக்டர் மரீனா தாஹா ரிபாய் – ஸ்தாபகத் தலைவி, அல்-முஸ்லிமாத்.
அஷ்-ஷேக் பேராசிரியர் கலாநிதி S.M.M. மஸாஹிர் – பேராசிரியர் (இஸ்லாமிய கலாசாரம்), இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்.
அஷ்-ஷேக் பேராசிரியர் J.D. கரீம்தீன் – பேராசிரியர் (சமூகவியல் கல்வி), இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அஷ்-ஷேக் S.H.M. பளீல் (BA, MA, MPhil) – சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமியா, பேருவளை.
அஷ்-ஷேக் அல்-ஹாபிஸ் கலாநிதி A.J.M. மக்தூம் (PhD) – உதவிப் பேராசிரியர் (AOP) மற்றும் வருகைதரு விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைக்கழகம்), ஃபத்வா குழு உறுப்பினர் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா).
அஷ்-ஷேக் கலாநிதி ரவூப் ஸெய்ன் (Ph.D) – சிரேஷ்ட ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் கல்வியியலாளர்,சிரேஷ்ட விரிவுரையாளர் (FIHE).
அஷ்-ஷேக் M.T.M. ரிஸ்வி (மஜீதி) – BA(Hons), PGDE, CTHE, MA, MPhil, PhD (Rd). சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
அஷ்-ஷேக் M. ஃபகீஹுதீன் (நளீமி) – BA, செயலாளர் (CDASF), பிரதம நிறைவேற்று அதிகாரி (Life Bond Foundation).
அஷ்-ஷேக் A.M.M. ஆஸாத் (நளீமி) – MA (சூடான்), தலைவர், ஸலாமா அமைப்பு (Salamah Society).
அஷ்-ஷேக் முஹம்மத் சாலி முஹம்மத் தாஸிம் (கஃபூரி) – தலைவர், சிலோன் முஸ்லிம் இளைஞர் சங்கம் (AMYS).
அஷ்-ஷேக் அப்துஸ் ஸமத் முஹம்மத் அக்ரம் (நளீமி, MA)
அஷ்-ஷேக் கலாநிதி M.I.M. சித்தீக் (PhD) – சிரேஷ்ட விரிவுரையாளர், உம்மு தர்தா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி, அக்கரைப்பற்று.
அஷ்-ஷேக் கலாநிதி A.P.M. அப்பாஸ் (நளீமி) – PhD (மலேசியா), தலைவர் (தர உறுதிப்படுத்தல் பிரிவு) சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா.
அஷ்-ஷேக் அல்-ஹாபிஸ் கலாநிதி முஹம்மத் இஸ்மத் ரம்ஸி (நளீமி) – சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வி பீடம், மலாயா பல்கலைக்கழகம், மலேசியா.
அஷ்-ஷேக் கலாநிதி L.M. முபீத் – PhD (அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம், எகிப்து). சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் மற்றும் பொருளியலாளர், அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு – கத்தார்.
அஷ்-ஷேக் A.M. ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) – BA, PGDE, M.Ed., Dip in Couns., சிரேஷ்ட ஆலோசகர்.
அஷ்-ஷேக் M.S. அப்துல் முஜீப் (கஃபூரி)
அஷ்-ஷேக் கலாநிதி M.J.M. அரபாத் கரீம் (நளீமி) – தலைவர் (கல்வி விவகாரங்கள்), ஜாமிஆ நளீமியா.
அஷ்-ஷேக் கலாநிதி M.F. முஹம்மத் ஸகீ – உதவிப் பேராசிரியர், அரசறிவியல் மற்றும் மதனீ கற்கைகள் துறை, சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம், மலேசியா.
அஷ்-ஷேக் M.I. அப்துல் ஜப்பார் (பஹ்ஜி)
அஷ்-ஷேக் முஹம்மத் யூனுஸ் சம்சு தப்ரீஸ் (அஹதி)
அஷ்-ஷேக் நாஹூர் ரஹீம்
இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை நெறிமுறைகளை மீறாமல் இஸ்லாத்தின் நெகிழ்ச்சித் தன்மைக்கு ஏற்ப நாட்டின் சட்டதிட்டங்களையும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.
