இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள், நிதி மற்றும் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர்களைச் சந்தித்து வர்த்தகத் துறையில் நிலவும் முட்டுக்கட்டைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நிதி அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் திரு. அவுக்கொட ஆகியோரும் பங்கேற்றனர்.
இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை விடுவிப்பதில் ஒரு வாரத்திற்கும் மேலாக தாமதம் நிலவுவதை அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
குறிப்பாக உப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500-600 FCL கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
இந்தத் தாமதங்களால் தேவையற்ற அந்நியச் செலாவணி வெளியேற்றம் ஏற்படுவதுடன், நாட்டுக்கு மேலதிக செலவுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அதிகாரிகளின் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதமே இந்த நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத் தீர்மானங்களின் போது CHA வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் திரு. நியாஸ் மற்றும் ஆலோசகர்களை உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, சுங்கப் பணிப்பாளர் நாயகம் வழங்கிய உடனடித் தீர்வுகள் மற்றும் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளுக்கு CUBA அமைப்பு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
