மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கவும், அத்தியாவசியச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் அரச செலவினங்களை முறையாக நிர்வகிப்பது அவசியமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் புதன்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றைத் தரம் பிரித்து ஆராய்ந்த அமைச்சரவை, பின்வரும் தீர்மானத்தை எடுத்துள்ளது:
பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவுகள், இனிமேல் 2026.03.01 அன்று நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
எரிபொருள் அளவு அல்லது எரிபொருள் விலையின் அடிப்படையில் வழங்கப்படும் இதர அனைத்து கொடுப்பனவுகளும், மறு அறிவித்தல் வரும் வரை கடந்த மார்ச் 1 ஆம் திகதி நிலவிய விலையிலேயே கணக்கிடப்பட வேண்டும்.
இதுவரை எரிபொருள் கொடுப்பனவுகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்துச் சுற்றறிக்கைகளும், இந்த புதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமையவே இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அந்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
