தற்போது இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் சர்வதேச இஸ்லாமிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில் இன்று 23ஆம் திகதி கோலாலம்பூரில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் உலகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான நடுநிலை வகித்தல், முஸ்லிம் உலகில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக இச்சந்திப்பின் போது, கலந்துரையாடல் மற்றும் நடுநிலை வகித்தல் போன்ற பணிகளை மென்மேலும் பலப்படுத்துதல், கூட்டாக இணைந்து பணியாற்றுதல், முஸ்லிம் உலகிலே கருத்து ஒற்றுமையை மென்மேலும் உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, பாலஸ்தீனம் எதிர்நோக்கியிருக்கின்ற மிக மோசமான நிலைமை பற்றியும், அதனைத் தீர்க்கும் வகையில் இஸ்லாமிய உலகின் தலைமைகளும் இஸ்லாமிய அறிஞர்களும் இணைந்து பணியாற்றுவதனுடைய அவசியம் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
