குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை எல் சால்வடார் அரசு அமுல்படுத்தியுள்ளது.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் தீவிரமான குற்றங்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பாயும்.
கொலை, பயங்கரவாதம் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற கொடூரமான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
ஜனாதிபதி நாயிப் புகேலேவின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், வரும் ஏப்ரல் 26, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
எல் சால்வடார் நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் காங் (Gang) வன்முறைகளை ஒடுக்குவதற்காக கடந்த 2022 முதல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே சிறுவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சுமார் 90,000-க்கும் மேற்பட்டோர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிசெஃப் (UNICEF) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“குழந்தைகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவது சர்வதேச சிறுவர் உரிமைகள் உடன்படிக்கைக்கு எதிரானது.
இது அவர்களின் மறுவாழ்வு மற்றும் எதிர்காலத்தை முற்றிலுமாக பாதிக்கும்,” என ஐநா சபை கவலை வெளியிட்டுள்ளது.இருப்பினும், “கொலைகாரர்களுக்கும் வன்புணர்வாளர்களுக்கும் சிறையே சரியான இடம்” என ஜனாதிபதி புகேலே தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
