நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். இடி மின்னல்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் நாட்டை சூழவுள்ள கடற்பகுதியின் சில இடங்களில் சிறிதளவு மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
