இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்க முடியாது எனத் தெரிவித்து கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள், அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கும், அதிபர்களுக்கும் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தண்டனை வழங்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கமாகும்.
பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக 2016 ஏப்ரல் 29ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக, இந்த புதிய சுற்றறிக்கையின் விதிகளும் இனிமேல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்தச் சுற்றறிக்கையானது இலங்கையின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் பந்தியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கும் முறையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவோ எந்தவொரு பிள்ளைக்கும் உடல் ரீதியான அல்லது மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது.
எந்தவொரு மட்டத்திலும், எந்தவொரு வடிவத்திலுமான உடல் ரீதியான தண்டனைகளை வழங்க முடியாது.இந்த விதிகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.
மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும்போது, குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இந்தச் சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.
இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படுவதுடன், வன்முறையற்ற கற்றல் சூழலை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும்.
