பதுளை மாவட்டம் சில்மியபுரத்தைப் பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜே. ஜமீலா அவர்கள் மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (IIUM) தனது கலாநிதி (PhD) பட்டத்துக்கான வாய்மொழிப் பரீட்சையில் (Viva Voce) மிகச்சிறப்பாகத் தேறி சித்தியடைந்துள்ளார்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிக நிறுவனத்தில் (ISTAC) பேராசிரியர் கலாநிதி தாவூத் அப்துல்மாலிக் யஹ்யா அல்-ஹிதாபி அவர்களின் மேற்பார்வையில் அவர் தனது ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.
“ஆசிரியர் தொழிலுக்கான இஸ்லாமிய விழுமியங்களின் கட்டமைப்பை உருவாக்குதல்: இலங்கையில் உள்ள முஸ்லிம் பள்ளிகளின் நிலை.”எனும் தலைப்பிலான இவரது ஆய்வானது, இலங்கையின் கல்வித்துறை, இஸ்லாமியக் கல்வித் தத்துவம் மற்றும் ஆசிரியர் தொழில்முறை ஒழுக்கக்கோவைகள் சார்ந்து ஒரு மிகமுக்கியமான கல்விப்புலப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.
அஷ்-ஷேக் இன்பாஸ் (நளிமி) அவர்களின் மனைவியான கலாநிதி ஜமீலா, பேராசிரியர் கலாநிதி ஜே.டி. கரீம்தீன் அவர்களின் சகோதரியும், அல்ஹாஜ் ஏ.சி. ஜலால்தீன் மற்றும் மறைந்த சித்தி ஸரூக்கா தம்பதியினரின் புதல்வியுமாவார்.
சில்மியபுர அல்-முர்ஷித் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவியான இவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்விமானி (B.Ed) பட்டத்தினையும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானி (M.Ed) பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித் துறையிலும் ஆய்வுத் துறையிலும் அவர் எட்டியுள்ள இந்த இமாலய மைல்கல்லானது அவரது குடும்பத்திற்கும், கல்விச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள நிலையில், கலாநிதி ஜலால்தீன் ஜமீலா அவர்களுக்கு கல்விப்புலத்தைச் சார்ந்தோர் மற்றும் நலன்விரும்பிகள் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சிறப்புமிக்க கல்விச் சாதனைக்காக டாக்டர் ஜலால்தீன் ஜமீலாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை ‘நியூஸ்நவ்’ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
