வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி மோசடி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், சொத்து உரிமையாளர்கள் தமது இடங்களை வாடகைக்கு வழங்கும் போது மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வீடுகளை வழங்குவது வழமையானது என்றாலும், சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான இடங்களைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் இணையவழி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த சொத்து உரிமையாளர்களும் சட்டச் சிக்கல்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவின்படி, எந்தவொரு வீட்டிலும் வசிப்பவர்கள் குறித்த தகவல்களைப் பெறும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு.
குடும்பத் தலைவர் அல்லது வீட்டின் உரிமையாளர், அங்கு தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
குடியிருப்பாளர்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கத் தவறுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
தமது வீடு அல்லது கட்டிட வளாகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தெரிந்திருந்தும் அதனை மறைப்பது, அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாகவே கருதப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, வீடுகளை வாடகைக்கு வழங்கும் போது, பெறுபவர்களின் அடையாளம் (Identity), நோக்கம் (Purpose) மற்றும் தேவை (Requirement) குறித்து உரிய முறையில் ஆராய்ந்து செயற்படுவதன் மூலம் இவ்வாறான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
