கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும் இலங்கையின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை சனிக்கிழமை (ஜூன் 27,) கண்டியில் அமைந்துள்ள NICD மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் அமைப்பு ரீதியான தற்போதைய தலைவராகக் கடமையாற்றும் அஷ்ஷேக் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாடானது, “இலக்கை நோக்கிய அழைப்பு” என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய காலசூழலில் முஸ்லிம் சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டிய, அதேபோன்று நாட்டுடைய மக்கள் என்ற வகையிலே சிந்திக்க வேண்டிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளும், பிரமுகர்களுக்கான உரைக்கான அமர்வுகளுமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 72 வருடகாலத்தில் புத்தகங்கள் வெளியிடுதல், சஞ்சிகைகள் வெளியிடுதல், மாநாடுகள் நடத்துதல், சமூக நலப்பணிகளை மேற்கொள்ளுதல், அதேபோன்று சகவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் உட்பட கல்வி நிலையங்கள், இஸ்லாமிய கல்விக்கூடங்கள் (சிங்கள, தமிழ் மொழியிலான இஸ்லாமிய கல்விக்கூடங்கள்) என்று பரந்துபட்ட பணியிலே இவ்வியக்கம் ஈடுபட்டு வந்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள இந்த அங்கத்தவர் மாநாட்டில், அதனுடைய யாப்பின் பிரகாரம் புதிய – இந்த ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்புக்கான புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
இம்மாநாட்டின் வெற்றிக்கு நியூஸ் நவ் சார்பாக (NewsNow) வாழ்த்துக்கள்.
