ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

Date:

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்கமாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்யாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஞானசார தேரர், சலேவை நாட்டின் பாதுகாப்பிற்காக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகச் சேவையாற்றிய ஒரு திறமையான புலனாய்வு அதிகாரி மற்றும் யுத்த வீரன் எனப் பாராட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் ஏதோ ஒரு குறிப்பிட்ட ‘மகா சூத்திரதாரி’  இருப்பதாகக் கூறப்படும் அரசியல் சதி கோட்பாடுகளை தேரர் முழுமையாக மறுத்துள்ளார்.

இந்தத் தாக்குதலானது ஏதோ ஒரு தனிநபரின் அரசியல் சதியால் நடக்கவில்லை என்றும், இது பல ஆண்டுகளாக நாட்டில் வளர்ந்து வந்த தீவிரவாதக் கொள்கைகளின்  விளைவு என்றும் அவர் வாதாடியுள்ளார்.

நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “இத்தகைய தாக்குதல் இலங்கையில் மட்டும்தான் நடந்ததா? உலகிலேயே இதுதான் முதல் முறையா? அப்படியிருக்க, இலங்கையில் மட்டும் ஏன் ஒரு மறைமுக சூத்திரதாரியைத் தேடி அலைகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிமுக்கு சுரேஷ் சலே 2,50,000 ரூபாய் நிதி உதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டை ஞானசார தேரர் திட்டவட்டமாக நிராகரித்தார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஏற்கனவே பல கோடீஸ்வர ஆதரவாளர்கள் மூலம் பெரும் நிதி ஆதாரங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தீவிரவாதப் பாதைக்கு இட்டுச் சென்றதாகக் கூறப்படும் அப்துல் ராசிக் போன்ற தனிநபர்கள் மீது ஏன் முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகப் பகிரங்கக் கருத்துக்களைக் கூறி வரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட கத்தோலிக்க மதகுருமார்களையும், முஸ்லிம் மதத் தலைவர்களையும் இந்தத் தாக்குதலின் உண்மைப் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து தன்னுடனும், பொதுமக்களுடனும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.

எஃப்பிஐ (FBI) மற்றும் உள்ளூர் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஏற்கனவே இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் நெட்வொர்க் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த போராட்டக்காரர்கள், சுரேஷ் சலே விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி, சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், நாட்டின் போர்க்காலத்தில் பணியாற்றிய இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினருக்குத் தங்களது ஆதரவைத் திரும்பத் திரும்பப் பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...