மத்திய கிழக்கு நாட்டுப் போரின் போது ஈரான் நாட்டின் மினாப் (Minab) பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த பள்ளிச் சிறார்களின் நினைவாக, ஈரான் உலகக்கோப்பை கால்பந்து அணி வீரர்கள் தங்களது சட்டைகளில் சிறப்பு நினைவுப் சின்னங்களை அணிந்து மெக்சிகோ வந்தடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28 அன்று தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் உள்ள புரட்சிகர காவல் படைத்தளத்திற்கு அருகில் அமைந்திருந்த ஆரம்பப் பள்ளி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான குழந்தைகள் உட்பட மொத்தம் 168 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக மெக்சிகோவின் திஜுவானா விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கிய ஈரான் வீரர்கள், தங்களது கோட் உடைகளில் ‘168’ என்ற எண் பொறிக்கப்பட்ட தங்க நிறத்திலான பேட்ஜ்களை அணிந்திருந்தனர். இது அந்தத் தாக்குதலில் பலியான 168 உயிர்களைக் குறிப்பதாகும். ஹங்கேரியில் உள்ள ஈரான் தூதரகமும் இந்த நிகழ்வை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் துருக்கியின் அந்தாலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வீரர்கள் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற பள்ளிப் பைகளை கைகளில் ஏந்தி தங்களது மௌன அஞ்சலியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் அடையாளங்களுக்கு ஃபிபா (FIFA) அமைப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், ஈரான் வீரர்களின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
