அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு ‘மௌலவி’ என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பிரசாரம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இறக்காமம் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு ‘மௌலவி’ அல்ல என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) இறக்காமம் கிளை உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உண்மை நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் ”மௌலவி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானதாகும்.
குறித்த சந்தேக நபர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் பட்டம் பெற்ற ஒரு மௌலவி அல்ல, மேலும் அவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தாய்ச் சபையிலோ அல்லது இறக்காமம் கிளைச் சபையிலோ அங்கத்தவரும் அல்ல என்பதை எமது சபை உறுதிப்படுத்துவதுடன் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம் என அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக ஊடகப் பகிர்வுகள் குறித்து ஒரு பார்வை
அண்மைக்காலமாக நாட்டில் மதத் தலைவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் பரவலான பகிர்வுகள் மிக மோசமாக இடம்பெற்று வருகின்றன. இது உண்மையிலேயே கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
சமூகத்தில் மக்களை நல்வழிப்படுத்துகின்ற பாரிய பங்களிப்பை செய்கின்ற மதத் தலைவர்கள் குறித்து, இவ்வாறான பிழையான பதிவுகள் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது.
ஒரு சில தனிநபர்கள் இத்தகைய குற்றங்களில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட, பெரும்பாலான மதத் தலைவர்கள் இப்படியான எந்தவொரு செயல்களிலும் சம்பந்தப்படாதவர்களாவர்.
அப்படியிருக்கையில், உண்மை நிலையை ஆராயாமல் இவ்வாறான செய்திகளை அளவுக்கு அதிகமாக பரப்புவதன் மூலம் மதத் தலைவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் விசுவாசமும் குறைகிறது.
சமூகத்தில் அவர்களின் வழிகாட்டல்களைப் பெறுகின்ற நிலை இல்லாமல் போகிறது. இதனால் சமூகம் மேலும் ஒரு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே, எந்தவொரு விடயத்திலும் நாம் அவசரப்படாமல் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பார்ப்பவர்கள் சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் விழுமியங்களைப் பேணக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அடுத்த சமூகத்தின் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதைத் தவிர்த்து, அவர்களின் மதத் தலைவர்களை அவமானப்படுத்தும் வகையிலான செய்திகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பொறுப்புடன் நடந்துகொள்வது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும் என்பதை நாம் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

