52 ஆண்டுக்கால ஏக்கம்: துருக்கியில் முதன்முறையாக மணமகன் ஆடை மற்றும் மணமகள் ஆடை அணிந்து அசத்திய முதிய தம்பதி!

Date:

துருக்கியின் சாம்சூன் மாகாணத்தில் உள்ள அட்டகும் மாவட்டத்தில் பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழ வைக்கும் ஒரு சுவாரசியமான திருமண விழா நடைபெற்றுள்ளது.

கடந்த 1974-ஆம் ஆண்டு, பெற்றோரின் சம்மதமின்மை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி (காதல் திருமணம்) ஒன்றுசேர்ந்தவர்கள் முஸ்தபா குச்சுகிசார் (76) மற்றும் அவரது மனைவி தொந்து (65).

அப்போது நிலவிய சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பாரம்பரிய முறைப்படி திருமண ஆடை அணிந்து விழா எடுக்க முடியாமல் போனது இவர்களது வாழ்வில் நீண்டகால ஏக்கமாகவே இருந்து வந்தது.

பாட்டி ‘தொந்து’ அவர்கள் மற்ற திருமண விழாக்களுக்குச் செல்லும்போது, தமக்கு ஒரு திருமண ஆடை  எடுத்துத் தரவில்லையே என்று கணவரிடம் பலமுறை தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தாயாரின் இந்த நீண்டகாலக் கனவை அறிந்த இவர்களது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இணைந்து அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி, அவர்கள் இருவரையும் அட்டகும் பகுதிக்கு வரவழைத்து, தம்பதியரின் 52 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் ஒரு முழுமையான திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.

வாழ்நாளில் முதன்முறையாக 76 வயதில் மணமகன் சூட்  அணிந்த முஸ்தபா மற்றும் 65 வயதில் வெண்பட்டு மணமகள் ஆடை அணிந்த தொந்து ஆகிய இருவருக்கும் பிரத்யேக புகைப்படக் கலைஞர் மூலம் ‘போட்டோஷூட்’ நடத்தப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த விழாவில், தம்பதியினர் தங்களது திருமண கேக்கை வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

“நாங்கள் அன்று வீட்டை விட்டு ஓடிவந்துதான் திருமணம் செய்துகொண்டோம், அதனால் விழா எதுவும் நடத்த முடியவில்லை. ‘எனக்கு ஒரு திருமண ஆடை கூட வாங்கித் தரவில்லையே’ என்று என் மனைவி பல வருடங்களாக என்னிடம் ஆதங்கப்படுவார்.

அது என் மனதிலும் ஒரு பாரமாகவே இருந்தது. இன்று என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் ஆதரவோடு அந்தப் பாரம் நீங்கி, இந்த வயதில் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் முஸ்தபா குச்சுகிசார்.

அரை நூற்றாண்டைக் கடந்து ஒன்று வாழ்ந்து வரும் இந்த தம்பதியரின் நெகிழ்ச்சியான திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது வாழ்த்துகளையும் பெற்று வருகின்றன.

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...