தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய் சசகாவா மற்றும் இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் (Dr. Rajesh Sambhajirao Pandav) ஆகியோர் தலைமையிலான சசகாவா சுகாதார அறக்கட்டளை (SHF) மற்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் குழுவினரை நேற்று பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ சந்தித்திருந்தார்.
சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இலங்கை தேசிய தொழுநோய் மாநாட்டிற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், இலங்கை அரசாங்கம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சசகாவா சுகாதார அறக்கட்டளை ஆகியவற்றிற்கு இடையே நிலவி வரும் வலுவான கூட்டாண்மை இக்கலந்துரையாடலின் போது பாராட்டப்பட்டது.
அரசியல் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துதல், சமூகப் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் முதன்மை சுகாதார சேவை அமைப்பினூடாக ஒருங்கிணைந்த, மக்கள் மையப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் இச்செயற்பாட்டை மேலும் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.
தேசிய மற்றும் உலகளாவிய இலக்குகளுக்கு அமைவாக செயற்பட்டு, தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்குவதற்கும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், தொழுநோய் சேவைகளை முதன்மை சுகாதார சேவையுடன் மேலும் ஒருங்கிணைப்பதற்கும் தேவையான தொடர்ச்சியான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாக உலக சுகாதார அமைப்பும் சசகாவா சுகாதார அறக்கட்டளையும் இங்கு உறுதியளித்தன.
